பழங்குடி மக்களின் வேளாண்மைக்கான சிறந்த பங்களிப்பு -ராஜலெட்சுமி
878
post-template-default,single,single-post,postid-878,single-format-standard,bridge-core-3.1.5,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-30.3.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.5,vc_responsive

பழங்குடி மக்களின் வேளாண்மைக்கான சிறந்த பங்களிப்பு -ராஜலெட்சுமி

வால்பாறை ஒட்டியுள்ள அடர்ந்த காடுகளில் வாழும் ஒரு பழங்குடி சமூகம் காடர் சமூகம். அங்கு மொத்தம் 25 குடும்பங்கள் வாழ்கிறது… மிளகு, இஞ்சி போன்றவற்றை பயிரிடுவதோடு காடுகளிலிருந்து கிடைக்கப்பெறும் பொருட்களையும் வால்பாறையில் விற்பனை செய்து வந்தனர். 2019 ஆம் ஆண்டு இயற்கை சீற்றத்தால் இந்த 25 குடும்பங்கள் வாழ்ந்த மொத்த கிராமமும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

புதியதாக இடம் கொடுக்க வனத்துறை சட்டம் வழிவகை செய்யாத போது அறவழியில் மக்களை ஒன்று திரட்டி போராடி, அரசாங்கத்துடன் இணைந்து 12 ஏக்கர் பரப்பளவில் புதிய கிராமத்தை உருவாக்கி கொடுத்தவர் காடர் சமூகத்தை சார்ந்த படிப்பறிவற்ற ராஜலட்சுமி என்ற 35 வயதுப் பெண்… இவருக்கு கையெழுத்து போடத் தெரியும் அவ்வளவுதான்.

புதியதாக உருவாக்கப்பட்ட கிராமத்திற்கு அம் மக்களை கொண்டே 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தியதோடு செங்கல், சிமெண்ட் போன்ற எந்த பொருட்களும் பயன்படுத்தாமல் அங்கு கிடைக்கும் இயற்கையான பொருட்களை வைத்தே அவர்களுக்கான வீட்டையும் அமைக்க காரணமாக
இருந்துள்ளார் ராஜலட்சுமி. இங்கு உள்ள காடார் மக்கள் தங்கள் விளைப் பொருட்களை வால்பாறையில் உள்ள ஒருவருக்கு மொத்தமாக விற்பனை செய்து வந்தனர்..

பழங்குடி மக்களின் பொருட்களில் கலப்படம் ஏதுமிருக்காது என்பதால் இவர்களுடைய பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்துள்ளது… ஆனால் இது மக்களுக்கு தெரியவில்லை… தெரிந்தாலும் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை…

இதை அறிந்த ராஜலட்சுமி சிலரின் உதவியுடன் 5 பெண்களை இணைத்து கள்ராணி பெண்கள் சுய உதவிக் குழு என்ற குழுவை நிறுவி இதன் மூலம் பழங்குடியினர் விளைப் பொருட்கள் விற்பனையகம் ஒன்றை நிறுவியுள்ளார்.

இதன் மூலம் காடர் சமூக மக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை இவர்களாகவே நேரடியாக சந்தைப்படுத்தி வருகிறார்கள்.. இதற்கு முன்பு 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட தேனை இன்று இவர்கள் 700 ரூபாய் கொடுத்து வாங்கி 800 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர்..

இவரின் தொடர் முயற்சியில் வால்பாறை நகராட்சியில் இவர்களுடைய பழங்குடி பசுமை அங்காடிக்கு ஒரு கடையும் தற்போது ஒதுக்கிதரப்பட்டுள்ளது. அதோடு மட்டுமன்றி வெளியில் இருப்பவர்களுக்கு தங்கள் பொருட்களை கூரியர் மூலமும் விற்பனை செய்து வருகிறார்கள்…

படிப்பறிவோ உலக அறிவோ எதுவும் இல்லாமல் பள்ளி படிப்பை கூட படிக்காத ராஜலட்சுமி தங்கள் மக்களின் மேம்பாட்டிற்காகவும் அடுத்த நிலை அடையவும் அதே நேரத்தில் இயற்கையை பாதிக்காதவாறும் தொடர்ந்து செயலாற்றி வருகிறார்.

இவருடைய சேவையைப் பாராட்டி பழங்குடி மக்களின் வேளாண்மைக்கான சிறந்த பங்களிப்புக்கான உழவர் விருதும் ரூபாய் 1 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

No Comments

Sorry, the comment form is closed at this time.