தமிழ்நாட்டில் விவசாய குடும்பங்களின் மொத்த வருமானத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்கு கால்நடை வளர்ப்பிலிருந்தே கிடைக்கிறது. விவசாயம் பொய்க்கும் காலங்களிலும், விவசாயியின் வாழ்க்கை முழுவதுமாக நின்றுவிடாமல் இயங்குவதற்கான முக்கிய காரணமாக கால்நடைகளும், அதிலிருந்து கிடைக்கும் வருமானமும் இருந்து வருகின்றன.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கால்நடை வளர்ப்புத் துறையில் இன்றும் பல சவால்கள் நிலவுகின்றன. தீவன மேலாண்மை, நோய் தடுப்பு, இன மேம்பாடு, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தாமை, சுகாதார பராமரிப்பில் கவனக் குறைவு போன்றவற்றில் ஏற்படும் சிறிய தவறுகள் கூட, பல மாதங்களாக செய்த உழைப்பை ஒரே நொடியில் பாதித்து, பெரிய பொருளாதார இழப்புகளை உருவாக்குகின்றன.
இன்றைய உலகம் தொழில்நுட்ப வளர்ச்சியில் வேகமாக முன்னேறி வருகிறது. ஆனால் அந்த தொழில்நுட்பமும், அறிவியல் சார்ந்த கால்நடை பராமரிப்பு முறைகளும், இன்னும் அனைத்து விவசாயிகளையும் முழுமையாக சென்றடையவில்லை. அதன் விளைவாக, கடின உழைப்பு இருந்தாலும் அதற்கேற்ற வருமானம் கிடைக்காத நிலை தொடர்ந்து வருகிறது.
இந்த சூழலை மாற்ற வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. கால்நடை வளர்ப்பை ஒரு முறைப்படுத்தப்பட்ட, நிலையான மற்றும் லாபகரமான தொழிலாக மாற்ற வேண்டிய காலம் இது.
விவசாயிகளை சரியான முறையில் வழிநடத்தி, நவீன கால்நடை பராமரிப்பு முறைகளை அறிமுகப்படுத்தி, அறிவியல் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கி, அவர்களின் நடைமுறை பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டியது அவசியமாகிறது.
நமக்காக உழைக்கும் விவசாயிகளுக்கு நாம் செய்யும் உண்மையான கைமாறு என்பது, அவர்களின் பிரச்சனைகளுக்கு நம்மால் இயன்ற பங்களிப்பை தொடர்ந்து வழங்குவதே ஆகும்.
இந்த நல் நோக்கத்துடன், உழவன் ஃபவுண்டேஷன் மற்றும் குமரகுரு வேளாண் கல்லூரி இணைந்து, ஆம்பினால் தொழிற்சாலையின் பங்களிப்புடன், மணப்பாறை வட்டம் – வெள்ளாளப்பட்டி பகுதியில், கால்நடை வளர்ப்பை மேம்படுத்தும் முக்கியத் திட்டத்தை 27.01.2026 அன்று முதல் தொடங்கியுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் கால்நடை வளர்ப்பில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறைக்கப்பட்டு, விவசாயிகளின் வருமானம் உயர்ந்து, அவர்களின் வாழ்க்கையில் நிலையான மாற்றம் உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த மாற்றத்தின் முக்கிய காரணிகளில் ஒன்றாக இந்தத் திட்டம் அமையும்.