செயல்பாடுகள்
396
wp-singular,page-template-default,page,page-id-396,wp-theme-bridge,wp-child-theme-bridge-child,bridge-core-3.1.5,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-30.3.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-8.7.2,vc_responsive

செயல்பாடுகள்

அண்ணா பல்கலைக்கழகம்

இன்று வேளாண்மையில் நிலவும் ஆள் பற்றாக்குறையை போக்க ஒரே தீர்வு டெக்னாலஜி மற்றும் அதன் மூலமாக வரும் சிறு சிறு கருவிகள் உழவை எளிதாக்கும். இதை பொறியியல் படிக்கும் மாணவர்கள்தான் முன்னெடுக்க வேண்டும். அதற்கு விவசாயம்னா என்ன? அதில் பொருட்கள் எப்படி உற்பத்தி செய்கிறார்கள் என்ற புரிதல் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு வர வேண்டும். அதற்காக அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள 5 ஏக்கர் நிலத்தில் Agri Field யை 5 இலட்சம் ரூபா‌ய் செலவில் உருவாக்க உழவன் ஃபவுண்டேஷன் தயாராக உள்ளது. அதை உருவாக்க முதல் தவனையாக ரூபாய் 1 இலட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில்-பெண்களுக்கு தேயிலை பறிக்க இயந்திரம் அளிக்கப்பட்டது

நீலகிரி மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேலான தாயகம் திரும்பிய குடும்பங்கள் உள்ளன. அவர்களில் பெரும்பாலானோர் சொந்த நிலம், வீடு, நிரந்திர வேலை என ஏதும் இல்லாதவர்கள். கூலி வேலைகளுக்கு செல்லும் பெரும்பாலான ஆண்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர்.. இந்த நிலையில் மொத்த குடும்பத்தையும் தாங்க வேண்டிய பொறுப்பை பெண்கள் ஏற்க வேண்டியதாகவுள்ளது. இங்குள்ள பெண்களுக்கு இருக்கும் பெரும்பான்மையான பணி என்பது கைகளால் தேயிலை பறிப்பதுதான்.

ஆனால் அதற்கு இவர்கள் படும் இன்னல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. பூச்சிகளால் உடலில் எரிச்சல், முக வீக்கம், மழைகாலங்களில் கம்பளிப்பூச்சியால் உடலில் அரிப்பு, அட்டை பூச்சிகளால் உறியப்படும் ரத்தம் என இவர்கள் வாழ்க்கை தினம் தினம் பல கொடூரங்களை கொண்டது. இப்படி வாழ்வாதரத்திற்காக தினமும் நடக்கும் இந்த போராட்டத்தில் கைகளால் பறிக்கும் தேயிலை மூலம் அவர்களுக்கு கிடைக்கும் அதிகபட்ச வருமானம் 300 ரூபாய். பறித்த தேயிலை மூட்டைகளை மேடு , பள்ளம், காடு என நாள் முழுவதும் உழைத்து களைத்து வரும் பெண்களால் கொண்டுவர முடிவதில்லை. அதை கொண்டுவருவதற்கும் அந்த சொற்ப வருமானத்திலிருந்து கூலி கொடுக்கிறார்கள். இப்படி நாள் முழுவதும் உழைப்பு, உடல்வலி, தோல் பிரச்சினைகளை அனுபவித்தாலும் இந்த சொற்ப வருமானங்களை நம்பி மட்டுமே வாழ வேண்டியுள்ளது. இதை களையும் பொருட்டு ரூபாய் 1.50 இலட்சம் செலவில் அவர்களுக்கு தேயிலை பறிக்க இயந்திரம் வாங்க முடிவு செய்து அதில் முதல் இயந்திரம் அளிக்கப்பட்டது.

சேவைக்கான ஊக்கத்தொகை - முனைவர் தேபல் தேப் மற்றும் நண்பர்கள்

முனைவர் தேபல் தேப், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர். இதுவரை 1400 க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து அதை உழவர்களுக்கும் வழங்கி வருகிறார். அவருடைய சேவையைப் பாராட்டி, கொரானா காலத்தில் அவருடைய ஆய்வுகள் தொடர்ந்து நடைப் பெற ரூபாய் 2 லட்சம் ஊக்கத்தொகையாக 18.09.2020 அன்று அளிக்கப்பட்டது.

ஏரி சீரமைப்பு - திருநெல்வேலி மாவட்டம்

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டத்தில் உள்ள தனக்கர் குளம் பஞ்சாயத்தில் 75 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வீசாடி குளத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி 22.09.2020 அன்று ஆரம்பிக்கப்பட்டு 05.10.2020 அன்று முடிக்கப்பட்டது.

வீசாடி குளம் சீரமைப்புக்கு முன்

வீசாடி குளம் சீரமைப்புக்கு பின்

சேவைக்கான உதவி - மரக்கன்றுகள் நட துளையிடும் கருவி

பல ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வரும் மதுரையைச் சேர்ந்த தமிழ்வனம் அமைப்பிற்கு மரக்கன்றுகள் நடுவதற்கு உதவியாக துளையிடும் கருவி ரூபாய் 22,819 செலவில் 13.10.2020 அன்று வாங்கியளிக்கப்பட்டது.

நலிவடைந்த குடும்பத்தைச் சேர்ந்த வேளாண் கல்லூரி மாணவிக்கு கல்லூரி கட்டணம்

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளியின் மகளான லெட்சுமி பிரியா அவர்கள், அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி திருச்சியில் பயின்று வருகிறார்..

 

கொரானா காலக்கட்டத்தில் அவருடைய கல்வி கட்டணத்தை கட்டும் நிலையில் பொருளாதாரச் சூழல் இல்லை. இம்மாணவியின் நிலையைக் கருத்தில் கொண்டு மூன்றாவது செமஸ்டருக்கான கல்விக் கட்டணம் ரூபாய் 16, 100, 09.10.2020 அன்று செலுத்தப்பட்டது.

நிவர் மற்றும் புரவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான உதவி

ராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் நிவர் மற்றும் புரவி புயலால் பாதிக்கப்பட்ட வேளாண் நிலங்களை மீட்டெடுக்க 40 உழவர்களுக்கு 50 கிலோ வீதம் ரூபாய் ஒரு லட்சம் செலவில் வேப்பம் புண்ணாக்கு 24.02.2021 அன்று வழங்கப்பட்டது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவாசயக் குடும்ப மாணவர்களுக்கு உதவித் தொகை

கஜா புயலால் பாதிக்கப்பட்டு தங்கள் உடமைகள் முழுவதையும் இழந்து தவித்த, நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச்சேரியைச் சேர்ந்த ஆப்ரின் பேகம் என்ற மாணவியின் மறுசீரமைப்புக்கு உதவும் வகையில் 20.12.2018 அன்று  ரூபாய் 20,000 வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த சிந்துஜா என்ற மாணவி குடும்பத்தின் மொத்த உடைமைகளும் கஜா புயலால் பறிபோனது. இம்மாணவியின் குடும்பத்தின் மறுசீரமைப்புக்கு உதவும் வகையில் 04.01.2019 அன்று ரூபாய் 20,000 வழங்கப்பட்டது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட உழவர்களுக்கு உழவர் விருதுகள்

டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து தகுதியுள்ள அதே சமயம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள்  ஐந்து பேரைக்  கண்டறிந்து அவர்களுக்கு 08.01.2019 அன்று உழவர் விருதும் 1,00,000 ற்க்கான காசோலையும் வழங்கி கௌரப்படுத்தப்பட்டது.

சேவைக்கான ஊக்கத்தொகை - மரம் கருணாநிதி

விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம் பேரூராட்சி, சங்கீதமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மரம் கருணாநிதி. அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணிபுரிகிறார்.

 

சிறுவயதிலிருந்தே இயற்கையை நேசிப்பதோடு அதன் பாதுகாப்புக்காக மரக்கன்றுகள் நடுவதையும் தொடங்கியவர். மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கவும், மற்றவர்களுக்கு மரக் கன்றுகளை இலவசமாக அளிக்கவும் தன் சம்பளம் முழுவதையும் செலவு செய்பவர். இதுவரை 7 இலட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டும் மற்றவர்களுக்கு வழங்கியும் வருகிறார்.

 

“மனுஷனா பொறந்தா எதாவது நல்ல விஷயமா இந்த சமூகத்திற்கு செஞ்சிட்டு போகனும்” என்கிறார்…
இவரின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி அவருக்கு ஊக்கத்தொகையாக 14-04-2019 ரூபாய் 50,000 த்திற்கான காசோலை வழங்கி கெளரவிக்கப்பட்டது.

ஏரி சீரமைப்பு - திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் எடப்பாளையம் கிராமத்தில் உள்ள விண்ணமலை ஏரி கடந்த 20 வருடங்களாக பராமரிப்பின்றி சீமைகருவேல மரங்களால் நிரம்பியிருந்தது.

 

இந்த ஏரியை சீரமைப்பதன் மூலம் 1500 ஏக்கர் நிலம் பாசன வசதியும், 7 கிராமங்களில் உள்ள 4500 குடும்பங்கள் குடிநீர் வசதியும் பெறும் என தெரியவந்தது.

 

இவ்ஏரியை சீரமைக்கும் பணி ஆம்பினால் ஆம்னி கனெக்ட் தொழிற்சாலை பங்களிப்புடன், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு. கந்தசாமி அவர்களால் 15.09.2020 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. 25/03/2020 விண்ணமலை எரி சீரமைக்கப்பட்டு வேலை முடிக்கப்பட்டது.

மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு - மறைமலைநகர்

தொழிற்சாலைகள் அதிகம் நிரம்பியுள்ள மறைமலைநகரில் காற்று மாசுபாடுகளை குறைக்கவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் ஆம்பினால் ஆம்னி கனெக்ட் தொழிற்சாலை பங்களிப்புடன், 500 க்கும் மேற்பட்ட மகிழம், வேம்பு, புங்கன், பாதாம், நாவல், நாகலிங்கம், மருதம் போன்ற மரக்கன்றுகள் 01.10.2019 அன்று நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது..

வாய்க்கால் சீரமைப்பு - திருநெல்வேலி மாவட்டம்

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் பணகுடி மற்றும் காவல் கிணறு ஊராட்சி பகுதிகளுக்கு மிக முக்கியமான நீராதாரமாக விளங்குவது மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி கிழக்கு நோக்கி பாயும் சூறாவளி ஓடை.

 

இச்சூறாவளி ஓடையானது மொத்தமாக 13 கிலோ மீட்டர் நீளமுள்ளது. இதன் மூலம் சிவகாமி புதுகுளம், மியாபுதுகுளம், லெப்பை குடியிருப்பு காளி புதுகுளம், லெப்பை குடியிருப்பு பெரிய புதுகுளம், புஞ்சைகட்டி குளம், விநாயகர் புதுகுளம் போன்ற 8 ஏரிகளுக்கு நீர்வரத்து செல்கிறது. இந்த ஏரியின் மூலம் 10,000 த்திற்க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது.

 

சூறாவளி வாய்க்கால் ஆம்பினால் ஆம்னி கனெக்ட் தொழிற்சாலை பங்களிப்புடன் 28.08.2020 சீரமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு 14.09.2020 அன்று முடிக்கப்பட்டது.

Green Tomorrow

சுற்றுச்சூழல் பாதுகாப்பும், இயற்கை வளங்களை மீட்டெடுப்பதும் இன்றைய காலத்தின் மிக முக்கியமான தேவையாக மாறியுள்ளது. அதிகரித்து வரும் வெப்பநிலை, குறைந்து வரும் பசுமை வளம் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்கள், மரங்களின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகின்றன. குறிப்பாக, உள்ளூர் இயற்கைச் சூழலுக்கு ஏற்ற நேடிவ் (Native) மரங்கள், சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாப்பதிலும், பறவைகள் மற்றும் உயிரினங்களின் வாழ்விடங்களை உருவாக்குவதிலும் முக்கிய பங்காற்றுகின்றன.

 

இந்த நோக்கத்தை முன்னிறுத்தி, ஆம்பினால் தொழிற்சாலையின் பங்களிப்புடன் Green Tomorrow என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், மணப்பாறை வட்டம் – வெள்ளாளப்பட்டி கிராமத்தில், 01.11.2025 முதல் 550 நேடிவ் மரக்கன்றுகள் நடப்பட்டு தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.

 

இந்த முயற்சி வெறும் மரக்கன்றுகளை நடும் திட்டமாக மட்டுமல்லாமல், எதிர்கால தலைமுறைக்கான பசுமையான சூழலை உருவாக்கும் நீண்டகால முயற்சியாக செயல்பட்டு வருகிறது. மரக்கன்றுகள் நடப்பட்ட பின்னரும் அவை ஆரோக்கியமாக வளர வேண்டும் என்ற நோக்கில், தொடர்ந்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

இந்த திட்டத்தின் மூலம் நிலத்தடி நீர் பாதுகாப்பு, காற்றின் தரத்தை மேம்படுத்துதல், உயிரினப் பன்முகத்தன்மையை ஊக்குவித்தல் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை சமூகத்தில் அதிகரித்தல் போன்ற பல நல்ல மாற்றங்கள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இன்று நாம் நடும் ஒவ்வொரு மரமும், நாளைய தலைமுறைக்கு வழங்கும் ஒரு மதிப்புமிக்க பரிசாகும். அந்த பசுமையான நாளையைக் கட்டியெழுப்பும் பயணத்தில், Green Tomorrow ஒரு முக்கியமான அடித்தளமாக அமைகிறது.

கயத்தார் மாடல் பண்ணை – மீண்டும் உயிர் பெறும் ஒரு சமூக முயற்சி

YMCA Madurai சார்பில் செயல்பட்டு வந்த கயத்தார் மாடல் பண்ணை, அந்தப் பகுதி மக்களிடையே நஞ்சில்லா உணவு மற்றும் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய ஒரு முக்கிய முயற்சியாக இருந்தது.
இந்தப் பண்ணை மூலம், இயற்கை மற்றும் பாதுகாப்பான உணவின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு தெளிவு ஏற்படுத்தப்பட்டது. அதோடு, இங்கு மேற்கொள்ளப்பட்ட விவசாய நடவடிக்கைகள் மூலம் கிடைத்த வருமானம், மாற்றுத் திறனாளி மாணவர்களின் பராமரிப்பு மற்றும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் ஓரளவு உதவியாக இருந்து வந்தது.

 

ஆனால், இந்தப் பண்ணை அமைந்திருந்த இடத்தின் கிணறு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் இருந்த காரணத்தால், பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு அரசு அந்தக் கிணற்றை மூடும் நடவடிக்கை மேற்கொண்டது. அதன் விளைவாக, பண்ணையின் முக்கிய நீராதாரம் பாதிக்கப்பட்டு, கயத்தார் மாடல் பண்ணையின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன.

 

இந்த நிலைமை, மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும், விவசாயத்தை நம்பியிருந்த பலருக்கும் பெரும் சவாலாக மாறியது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவும், மீண்டும் அந்தப் பண்ணையை செயல்பாட்டுக்கு கொண்டு வரவும், மாணவர்களுக்கும் விவசாயிகளுக்கும் தொடர்ந்து ஆதரவாக இருக்கவும், ஆம்பினால் தொழிற்சாலையின் பங்களிப்புடன் 05.04.2026 அன்று புதிய கிணறு வெட்டும் பணிகள் தொடங்கப்பட்டன.

 

இந்த முயற்சி வெறும் ஒரு கிணறு வெட்டும் பணியாக இல்லாமல், நின்றுபோன ஒரு சமூக மாற்றப் பயணத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் நடவடிக்கையாகும். இந்தத் திட்டத்தின் மூலம், கயத்தார் மாடல் பண்ணை மீண்டும் செயல்பட்டு, மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும், விவசாய சமூகத்திற்கும் பயனளிக்கும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.

காலிங்கராயன் வாய்க்கால் – வரலாறும் அறிவியலும் அறிய நடைப்பயணம்

800 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தை தாங்கி நிற்கும், ஈரோடு மாவட்டத்தின் பெருமையான காலிங்கராயன் வாய்க்கால் இன்று ஆயிரக்கணக்கான விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.

 

ஆனால், தற்போது இந்த வாய்க்காலில் கழிவுநீர் மற்றும் சாயப்பட்டறை கழிவுகள் கலப்பது போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. மேலும், இப்பகுதி மக்களிடையே காலிங்கராயன் வாய்க்காலின் வரலாறு, அதன் பின்னணியில் உள்ள அறிவியல், மற்றும் முன்னோர்களின் தியாகம் குறித்த விழிப்புணர்வு போதுமான அளவில் இல்லை.

 

இதனை மாற்றி, அடுத்த தலைமுறையினருக்கு நீரின் முக்கியத்துவம், முன்னோர்களின் அறிவியல் சிந்தனை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை எடுத்துச் செல்லும் நோக்கில், குமரகுரு வேளாண் கல்லூரி மற்றும் YI ஈரோடு அமைப்புடன் இணைந்து “காலிங்கராயன் வாய்க்காலின் வரலாறும் அறிவியலும் அறிய நடைப்பயணம்” என்ற திட்டம் உருவாக்கப்பட்டது.

 

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீர் வளத்தின் அவசியத்தை மாணவர்களிடம் கொண்டு செல்லும் இந்த முயற்சி, கடந்த நான்கு ஆண்டுகளில் (10.09.2022 to 31.03.2026) நூற்றுக்கணக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் 14,000-க்கும் மேற்பட்ட மாணவர்களை சென்றடைந்துள்ளது.

 

இந்த முயற்சி, வரலாற்றை அறிந்து பாதுகாக்கும் பொறுப்புணர்வையும், நீரின் மதிப்பை உணர்த்தும் விழிப்புணர்வையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்கிறது.

கால்நடை வளர்ப்பில் முன்னேற்றம் – விவசாயிகளின் வாழ்வில் மாற்றம்

தமிழ்நாட்டில் விவசாய குடும்பங்களின் மொத்த வருமானத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்கு கால்நடை வளர்ப்பிலிருந்தே கிடைக்கிறது. விவசாயம் பொய்க்கும் காலங்களிலும், விவசாயியின் வாழ்க்கை முழுவதுமாக நின்றுவிடாமல் இயங்குவதற்கான முக்கிய காரணமாக கால்நடைகளும், அதிலிருந்து கிடைக்கும் வருமானமும் இருந்து வருகின்றன.

 

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கால்நடை வளர்ப்புத் துறையில் இன்றும் பல சவால்கள் நிலவுகின்றன. தீவன மேலாண்மை, நோய் தடுப்பு, இன மேம்பாடு, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தாமை, சுகாதார பராமரிப்பில் கவனக் குறைவு போன்றவற்றில் ஏற்படும் சிறிய தவறுகள் கூட, பல மாதங்களாக செய்த உழைப்பை ஒரே நொடியில் பாதித்து, பெரிய பொருளாதார இழப்புகளை உருவாக்குகின்றன.

 

இன்றைய உலகம் தொழில்நுட்ப வளர்ச்சியில் வேகமாக முன்னேறி வருகிறது. ஆனால் அந்த தொழில்நுட்பமும், அறிவியல் சார்ந்த கால்நடை பராமரிப்பு முறைகளும், இன்னும் அனைத்து விவசாயிகளையும் முழுமையாக சென்றடையவில்லை. அதன் விளைவாக, கடின உழைப்பு இருந்தாலும் அதற்கேற்ற வருமானம் கிடைக்காத நிலை தொடர்ந்து வருகிறது.

 

இந்த சூழலை மாற்ற வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. கால்நடை வளர்ப்பை ஒரு முறைப்படுத்தப்பட்ட, நிலையான மற்றும் லாபகரமான தொழிலாக மாற்ற வேண்டிய காலம் இது.

 

விவசாயிகளை சரியான முறையில் வழிநடத்தி, நவீன கால்நடை பராமரிப்பு முறைகளை அறிமுகப்படுத்தி, அறிவியல் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கி, அவர்களின் நடைமுறை பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டியது அவசியமாகிறது.

 

நமக்காக உழைக்கும் விவசாயிகளுக்கு நாம் செய்யும் உண்மையான கைமாறு என்பது, அவர்களின் பிரச்சனைகளுக்கு நம்மால் இயன்ற பங்களிப்பை தொடர்ந்து வழங்குவதே ஆகும்.

 

இந்த நல் நோக்கத்துடன், உழவன் ஃபவுண்டேஷன் மற்றும் குமரகுரு வேளாண் கல்லூரி இணைந்து, ஆம்பினால் தொழிற்சாலையின் பங்களிப்புடன், மணப்பாறை வட்டம் – வெள்ளாளப்பட்டி பகுதியில், கால்நடை வளர்ப்பை மேம்படுத்தும் முக்கியத் திட்டத்தை 27.01.2026 அன்று முதல்  தொடங்கியுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் கால்நடை வளர்ப்பில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறைக்கப்பட்டு, விவசாயிகளின் வருமானம் உயர்ந்து, அவர்களின் வாழ்க்கையில் நிலையான மாற்றம் உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த மாற்றத்தின் முக்கிய காரணிகளில் ஒன்றாக இந்தத் திட்டம் அமையும்.

Inaugration Gallery
Survey Gallery
Camp Gallery
Village Meet Gallery
Rural Mart Gallery